நாவிதன்வௌி பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளருக்கு பிரியாவிடை நிகழ்வு
நாவிதன்வௌி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றி காரைதீவு பிரதேச செயலகத்திற்கு இடமாற்றம் பெற்று செல்லும் திரு. பே. பிரணவரூபன் அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வானது பிரதேச செயலாளர் திருமதி. ராகுலநாயகி சஜிந்ரன் அவர்களின் தலைமையில் 2025 செப்டம்பர் 02 ஆம் திகதியன்று பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், நாவிதன்வௌி பிரதேச செயலக கணக்காளர் திரு. க. றிஸ்வி யஹ்சர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. தி. கிருபைராஜா, நிருவாக உத்தியோகத்தர் திரு. ஓ. கே. கீர்த்தி குசுமிந்த, மேலதிக மாவட்ட பதிவாளர் திரு. பு. நித்தியானந்தன் ஆகியயோருடன் பிரதேச செயலக பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள், கிராம அலுவலர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அலுவலக மற்றும் வௌிக்கள உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர் சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு இடமாற்றம் பெற்று செல்லும் உதவி பிரதேச செயலாளருக்கான வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்ததுடன் அன்பளிப்புக்களையும் வழங்கிவைத்தனர்.
இலங்கை பேராதனை பல்கலைகழக வர்த்தகவியல் பட்டதாரியான (B.Com) திரு. பே. பிரணவரூபன் அவர்கள் 2019 மார்ச் 05 ஆம் திகதி இலங்கை நிருவாக சேவையில் நியமனம் பெற்று இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவனம், மகாஓயா பிரதேச செயலகம் ஆகிய இடங்களில் தனது சிறப்பான சேவையை வழங்கியுள்ளதுடன் கடந்த 2021 செப்டம்பர் 23 ஆம் திகதி முதல் நாவிதன்வௌி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
















